சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் (ஐ.சி.சி.,) 10வது மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் மும்பை மற்றும் கட்டாக் நகரில் நடைபெற்று வருகின்றன.நேற்று, மும்பையில் நடந்த “சூப்பர்-6” சுற்று போட்டியில் “நடப்பு சாம்பியன்” இங்கிலாந்து, அவுஸ்திரேலியா அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணிக்கு லிசா ஸ்தலிகர் 41 ஓட்டங்களும், சாரா காய்டி 44 ஓட்டங்களும் எடுத்து கைகொடுத்தனர். அவுஸ்திரேலிய அணி 44.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 147 ஓட்டங்கள் எடுத்தது.
சுலப இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணி 47.3 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 145 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.
லிடியா கிரீன்வே 49 ஓட்டங்களும், லாரா மார்ஷ் 22 ஓட்டங்களும் எடுத்தனர். பந்து வீச்சில் அவுஸ்திரேலியா சார்பில் ஹோலி பெர்லிங் 3 விக்கெட் கைப்பற்றினார்.
மும்பையில் நடந்த மற்றொரு “சூப்பர்-6” போட்டியில் இலங்கை, நியூசிலாந்து அணிகள் மோதின. முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியின் திலானி சுரங்கிகா 34 ஓட்டங்களும், தீபிகா ரசாங்கிகா 20 ஓட்டங்களும் மட்டுமே எடுத்தனர். மற்ற வீராங்கனைகள் சொதப்ப இலங்கை அணி 42 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 103 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.
எளிய இலக்கை விரட்டிய நியூசிலாந்து அணி 23 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 108 ஓட்டங்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பிரான்சஸ் மெக்கே 39 ஓட்டங்களும், அணித்தலைவி சுஜி பேட்ஸ் 37 ஓட்டங்களும், சோபி டேவின் 29 ஓட்டங்களும் எடுத்தனர்.
கட்டாக் நகரில் நடந்த “சூப்பர்-6” போட்டியில் தென் ஆப்ரிக்கா, மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதின. முதலில் துடுப்பெடுத்தாடிய தென் ஆப்ரிக்க அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 230 ஓட்டங்கள் எடுத்தது. திரிஷா ஷெட்டி 45 ஓட்டங்களும், ஷெல்டா பிரிட்ஸ் 44 ஓட்டங்களும் எடுத்தனர்.
பின்பு களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணிக்கு ஸ்டபானி டெய்லர் 75 ஓட்டங்களும், கைகா நைட் 46 ஓட்டங்களும் எடுத்து நம்பிக்கை அளிக்க 45.3 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 234 ஓட்டங்கள் எடுத்து, 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.





|